நாங்கள் யார்?
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கால்நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த கொடிய போரும், அதன் உச்சக்கட்டமாக நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் பேரவலமும், தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத பேரழிவுகளாகும். இந்தப் போரால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு, எண்ணற்ற குடும்பங்கள் தங்கள் உறவுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து துயரத்தில் தத்தளித்தன.
இந்த வரலாற்றுப் பேரவலால் பாதிக்கப்பட்ட எங்கள் அன்பு தாயக உறவுகளுக்கு உதவும் நோக்கில், மனிதநேய உணர்வுடன் ஒன்றிணைந்த நண்பர்கள் குழுவொன்று ஜெர்மனியில் “உதவும் இதயங்கள் – Helping Hearts e.V.” என்ற அமைப்பை உருவாக்கியது. ஜெர்மன் நாட்டின் சட்டங்களையும் இறையாண்மையையும் மதித்து, ஒழுங்குமுறைகளுடன் பதிவு செய்யப்பட்ட எங்கள் அமைப்பு, 2012 ஆம் ஆண்டிலிருந்து சமூகநலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
“உதவும் இதயங்கள் – Helping Hearts e.V.” (VR460552, Amtsgericht Spaichingen) அமைப்பு, தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பையும், வெளிப்படைத்தன்மை, நேர்மை, ஒழுக்கம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளையும் மையமாகக் கொண்டு செயல்படுகிறது. மனிதாபிமான சேவையை உயர்ந்த பொறுப்பாகக் கருதி, உண்மையாக உதவி தேவைப்படுகிற மக்களை நேரடியாக அடையாளம் கண்டு, திட்டமிட்ட மற்றும் நிலையான உதவிகளை வழங்கி வருகின்றோம்.